top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

சொல் மனிதா சொல்...

 

சாத்திரம் படிப்பான் சாதிகள் மறுப்பான் 
சபைகளில் ஏறி நின்று - அட 
கோத்திரம் மாறி புத்திரன் போனால் 
கொலையும் செய்வான் இன்று ! 

கண்ணே என்பான் முத்தே என்பான் 
காதலில் விழுந்த அன்று ! - அட 
காரியம் முடிந்ததும் எவன்டா சொன்னான் 
பொண்ணுங்க தேவதை என்று ? 

கடவுள் என்பான் கும்பிடு என்பான் 
கஷ்டங்கள் போகும் என்று - அட 
எதடா கடவுள் சொல்லடா என்றால் 
முறைப்பான் முட்டாள் என்று ! 

காசு கொடுப்பான் நரபலி கொடுப்பான் 
புண்ணியம் வேண்டும் என்று - அட 
கஞ்சோ சோறோ எவன்டா கொடுத்தான் 
இல்லா ஏழைக்கு இன்று ? 

கஞ்சா விற்பான் கசிப்பு விற்பான் 
காசு வேண்டும் என்று - அட 
கட்சி தொடங்கி மந்திரி ஆவான் 
காசு கூடினால் இன்று ! 

வாய்மை என்பான் தூய்மை என்பான் 
வாக்குகள் பெறனும் என்று - அட 
வென்றதும் எவன்டா நேர்மையா நின்று 
ஊருக்கு உழைத்தான் இன்று ? 

அவனும் சொல்வான் இவனும் சொல்வான் 
அதர்மம் ஒழிப்போம் என்று - அட 
எவன்தான் வென்றான் இந்தப் பூமியில் 
தர்மம் காத்து இன்று ?

bottom of page