top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

அய்யோ அய்யய்யோ...!

 

திரை செய்து 

மனம் கெட்டான் 

நரை கண்டும் 

குணம் கெட்டான் 

தரை தவழும் பூ மீதும் 

தப்பெண்ணம் 

படர விட்டான் ! 

 

சோலை போலே 

கலையிருக்க 

சேலைக்குள்ளே 

கதை வைத்தான் ! 

வாழ வைக்கும் 

தமிழ் முகத்தில் 

நீல அமிலம் 

ஊற்றி வைத்தான் !. 

 

இசை கடித்து 

காதெல்லாம் 

ரத்தம் வழிய வழிசெய்தான் ! 

கதை கடித்து 

நெஞ்செல்லாம் 

புத்தம் புதிய வலிசெய்தான் ! 

 

வன்முறைகள் 

படிப்பித்தான் 

வரைமுறைகள் 

தணிக்கை செய்தான் ! 

வில்லனை அடித்து 

ரசிகனை கொன்று 

ஒரு குத்து ! ஆயிரம் சாவு ! 

"படம் காட்டினான் !" 

 

வெள்ளாவி 

அவித்தது போல 

வெண் மகளிர் 

உரித்து வைத்தான் ! 

கொட்டாவி 

கூட இங்கு 

ஆங்கிலத்தில் 

விட்டு போனான் ! 

 

அம்மணமாய் 

ஆட வைத்தான் 

அத்தனையும் 

கலை என்றான் 

கலைமகளை விலங்கிட்டு 

விலைமகளாய் 

கூட்டிப் போனான் ! 

 

ஹாலிவூடு 

போல நாங்கள் 

ஆக வேண்டும் 

என்றுரைத்தான் 

கோலிவூட்டை 

காலி வீ டாய் ஆக்கிவிட்டு 

காசு தின்று 

ஏப்பம் விட்டான் ! 

 

வாழ வைத்தான் 

ஆள வைத்தான் 

தமிழ் தாய்க்கு வாய்க்கரிசி 

போட வைத்தான் ! 

ஆட வைத்தான் 

பாட வைத்தான் 

தவிக்கும் வாய்க்கு நீர்கேட்டு 

வாட வைத்தான் ! 

 

மூத்த மொழி ! 

மூத்த மொழி ! 

மேடையேறி சூளுரைத்தான்! 

காசு பணம் 

ஆசை வைத்தான் ! 

மாசு குணம் 

மனம் வைத்தான் ! 

மூத்த மொழி தள்ளாடி 

பாடையேறி போக வைத்தான் ! 

----------------------------------------------

சினிமாக்காரன் !

bottom of page