top of page
- எழுத்தால் இளைப்பாற -
கலைப் பூங்கா
துவேசக் கோடு !
கையளவு நெஞ்சுக்குள்
கடலளவு நஞ்சு நிரப்பி
கண்டங்கள் சமுத்திரங்கள்
கடந்து செல்லும் வேர்பரப்பி
ஆலமரமாய் வளர்ந்து நிற்கும்
அறியாமைத் துவேசம் !
மரமேறி வீழ்ந்தோனை
மாடாக ஏறி மிதித்து
சிரமேறும் சிறுதனத்தால்
சீறுகின்ற இயக்கங்கள்
அபலைகளின் குருதியாற்றில்
தூண்டிலிட்டு மீன் பிடிக்க
ஒற்றைக்காலில் நிற்குதுவோ ?
புண்ணுற்று எருதுநிற்க
களிப்புற்ற காக்கைகள்
முதுகேறி புண்கொத்தி
பசியடக்க வேட்கையுற்று
சொல்லொணா தீங்கிழைத்து
செய்வதெல்லாம் நன்மையாமோ ?
மலிந்து போன குரூரத்தால்
நலிந்து போன ஓரினத்தை
சூறையாட வேட்டையாட
சூரத்தனம் தேவையாமோ ?
மதம் என்ற மரம் விட்டு
பறக்கின்ற பட்சிகளும்
மீண்டுமந்த மரம் வந்து
மடமையுற வைக்கின்ற
மதப் போராட்டங்கள் ஓயாதா ?
மனப் போராட்டங்கள் தீராதா ?
ஈனத்தனம் எதுவென்று
சுற்றும் பூமி நன்கறியும்
இனத்துவேசம் தம்கவசம்
என்றநிலை உச்சம்தொட
முற்றும் பூமி பற்றியெரியும் !
bottom of page