- எழுத்தால் இளைப்பாற -
கலைப் பூங்கா
தமிழா தமிழா நீ...
பாரதி வள்ளுவன் புகட்டியப் பாடங்கள்
மீறினாய் - குறை கூறினாய் !
சாரதி இல்லாத ஊர்தியைப் போலவே
ஓடினாய் - இடர் தேடினாய் !
மண்பாட்டு மறந்து மகிமை துறந்து
பறந்தாய் - ஊரை மறந்தாய் !
பண்பாட்டு ஒழுக்கம் பழக்க வழக்கம்
மாற்றினாய் - ஊறு போற்றினாய் !
கடலைத் தாண்டியும் காமத்தைக் காவியே
ஆடினாய் - நோயில் வாடினாய் !
கடவுளைத் தேடியும் காசைத் தேடியும்
முக்கினாய் - துயரில் சிக்கினாய் !
சாதிகள் மதங்கள் பேதங்கள் வன்முறை
ஓதினாய் - முட்டி மோதினாய் !
நீதிகள் வேதங்கள் யாவையும் பாலையாய்
ஆக்கினாய் - வெறிப் போக்கினாய்!
ஆடையில் பாடையில் அறத்தை மீறியே
பொங்கினாய்- சுயம் மங்கினாய்!
மேடையில் வீட்டுக்குள் மேதகு தமிழைநீ
நீக்கினாய் - அகம் தாக்கினாய் !
ஆங்கிலம் என்றோர் அமிலத்தை நெஞ்சினில்
ஊற்றினாய்- தமிழைத் தூற்றினாய்!
பூங்குயில் குரலென இனித்திடும் மொழியிது
ஒதுக்கினாய்- பிழைச் செதுக்கினாய்!
மடமையைத் துறந்து காயங்கள் அறிந்து
ஆற்றுவாய் - குணம் மாற்றுவாய் !
உடமைகள் இழந்து உயிரேப் போகினும்
ஏற்றுவாய் தமிழைப் போற்றுவாய் !