top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

தமிழா தமிழா நீ...

 

பாரதி வள்ளுவன் புகட்டியப் பாடங்கள் 

மீறினாய் - குறை கூறினாய் ! 

சாரதி இல்லாத ஊர்தியைப் போலவே 

ஓடினாய் - இடர் தேடினாய் ! 

 

மண்பாட்டு மறந்து மகிமை துறந்து 

பறந்தாய் - ஊரை மறந்தாய் ! 

பண்பாட்டு ஒழுக்கம் பழக்க வழக்கம் 

மாற்றினாய் - ஊறு போற்றினாய் ! 

 

கடலைத் தாண்டியும் காமத்தைக் காவியே 

ஆடினாய் - நோயில் வாடினாய் ! 

கடவுளைத் தேடியும் காசைத் தேடியும் 

முக்கினாய் - துயரில் சிக்கினாய் ! 

 

சாதிகள் மதங்கள் பேதங்கள் வன்முறை 

ஓதினாய் - முட்டி மோதினாய் ! 

நீதிகள் வேதங்கள் யாவையும் பாலையாய் 

ஆக்கினாய் - வெறிப் போக்கினாய்! 

 

ஆடையில் பாடையில் அறத்தை மீறியே 

பொங்கினாய்- சுயம் மங்கினாய்! 

மேடையில் வீட்டுக்குள் மேதகு தமிழைநீ 

நீக்கினாய் - அகம் தாக்கினாய் ! 

 

ஆங்கிலம் என்றோர் அமிலத்தை நெஞ்சினில் 

ஊற்றினாய்- தமிழைத் தூற்றினாய்! 

பூங்குயில் குரலென இனித்திடும் மொழியிது 

ஒதுக்கினாய்- பிழைச் செதுக்கினாய்! 

 

மடமையைத் துறந்து காயங்கள் அறிந்து 

ஆற்றுவாய் - குணம் மாற்றுவாய் ! 

உடமைகள் இழந்து உயிரேப் போகினும் 

ஏற்றுவாய் தமிழைப் போற்றுவாய் !

bottom of page