top of page
- எழுத்தால் இளைப்பாற -
கலைப் பூங்கா
மீட்டல் !
செவ்வானம் சிரிச்சிருக்க பனிப்பூவு பூத்திருக்க
காட்டுவழி ஒத்தயடி நடந்துபோன காலமது !
ஆண்டுபல அழிஞ்சாலும் மனசுக்குள்ள இந்நாளும்
அழியாம தேங்கிநிக்கும் அந்தநாள் ஞாபகங்கள் !
ஒருவேள சோத்துக்கு மூவேள யோசிக்கும்
ஏழக்குடும்பத்து ஏழு பேரில் நானொருத்தன்
கூழ்குடிக்க வக்கில்லாம திண்டாடி வாழ்ந்தாலும்
பள்ளிக்கூடம் போய்ப்படிக்க மறக்காத காலமது !
பால்குடுத்துப் பசியாத்தி வளத்துவிட்ட அம்மாவும்
பாடுபட்ட கஷ்டத்த மறச்சிகிட்டு அப்பாவும்
அட்டைக்கு ரத்தங்குடுத்து அல்லோடு பகலொழச்சி
அஞ்சிப்பேர படிக்கவைக்க அல்லபட்ட காலமது !
===
ரோட்டோர வாகமரம் கூதகாத்த வீசுரப்போ
தேவார திருப்பதிகம் மனசுக்குள்ள பேசுறப்போ
மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காலாற நடந்தோடி
கூடார பள்ளிக்கு கூட்டாக நாம் போவோம் !
பாக்குபட்ட இழுவண்டி பள்ளத்துல இழுத்துக்கிட்டு
கொட்டபாக்கு பம்பரத்த கொக்கரிச்சி உருட்டியாடி
தென்னமட்ட மட்டையாட்டம் மறக்காம தினமாடி
காட்டுக்குச்சி கிட்டிபுள்ளு கலகலத்த காலமது !
பள்ளிவிட்டு வீடுவந்து பால்பேணி தூக்கிகிட்டு
துள்ளிக் குதிச்சி குறுக்குப்படி எறங்கியோடி
பால்காரன் வாரவர பசியோட காத்திருந்து,
ஊத்திபுட்டு படியேறி வூட்டுக்குநா வந்திருக்கே(ன்) !
சோறிருந்தா கொட்டிகுவே இல்லாட்டி கணக்கில்ல
பழகப்பட்ட வயித்துக்கு பசியால வருத்தமில்ல!
கூடபொறந்த நாலுபேரும் இப்படிதான் இருப்பாங்க
கூட்டணியா கூத்தடிப்போ அந்தியில எந்தநாளு(ம்)!
வெட்டுத்துணி ஒட்டுபோட்ட பொஸ்தகப்பை,
மஞ்சநிற மாகிப்போன பள்ளிக்கூட வெள்ளாட-
எள்ளி நகையாடி என்னகொன்ன கூட்டமுண்டு
எல்லாரயும் அன்னைக்கே மனசார மன்னிச்சே(ன்) !
சொல்லிகிட்டே போகலாங்க அந்தகால நினைவுகள
தேனாக இனிக்குஞ்சில தேளாக கொட்டுஞ்சில
தானாக என்னதட்டி எண்ணத்த சொட்டுதிங்க
தாலாட்டு நெனவெல்லா எந்நாளும் சொகம்தாங்க!
bottom of page